சாத்தான் எனும் நடிகன்
சமீபத்தில் ஹாக்னோஷ் என்ற வகைப் பாம்புகளைக் குறித்து ஒரு பத்திரிகையில் தகவல் வெளியாகியிருந்தது. இந்த பாம்புகள் மிகவும் தந்திரமானவை. இவற்றுக்கு விஷம் கிடையாது. இந்த பாம்பு நம்மை கடித்தால் ஒன்றும் ஆகாது. ஆனால் இது தன்னை யாரேனும் தாக்க வரும்போது அவர்களிடத்திலிருந்து தப்பித்துக்கொள்ள படமெடுத்து சீறி எழுந்து கொத்தபோவது போல வீராப்பாய் பாவனை செய்யும். எதிரி பலசாலியாக இருந்து, தான் படமெடுத்தும் வேஷம் போட்டும் பிரயோஜனமில்லை என்று தெரிய வரும்போது, செத்தது போல் அப்படியே அசையமால் கிடக்கும். பாம்பு செத்துவிட்டது என்று நம்பி எதிரிகள் போன பிறகு, திரும்பவும் நகர்ந்து சென்று தப்பித்துக்கொள்ளும்.
இதைப்போலத்தான் சாத்தானும் மிகவும் தந்திரசாலி. மிகப்பெரிய நடிகன். இவனுக்கு எவ்வித அதிகாரமோ, வல்லமையோ இல்லை. காரணம், இவனை இயேசு கிறிஸ்து சிலுவை மரணத்தினாலே ஜெயித்து விட்டார். ஆனாலும் இந்த பிசாசானவன் இன்று நம்மை பயமுறுத்தி, அதிக சக்தி வாய்ந்தவனைப் போல, நம்மை வீழ்த்தி விடுவதைப்போல நடித்துக் கொண்டிருக்கிறான். இவனுக்கு பயந்து நாம், தெருத் தெருவாய், ஊர், ஊராய், மந்திரவதிகளையும் பிசாசு விரட்டுபவர்களையும் தேடி நாடிச் செல்கிறோம்.
ஆனால், உண்மையில், பிசாசு செத்துப்போன பாம்பு. அவன் தலையை இயேசு கிறிஸ்து நசுக்கி விட்டார். வால் மாத்திரம் கொஞ்சம் அடிகொண்டிருக்கிறது. இந்த பிசாசுக்கு நாம் பயப்பட வேண்டிய அவசியமில்லை. "திருடன் (பிசாசு) திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான்" (யோவான் 10: 10). இந்த திருட்டு பிசாசின் (ஆத்துமாவை திருடுகிறவன்) ஆளுகை ஒரு மனிதனுக்குள் முழுவதுமாக இறங்கி வரும்போது அவன் தன்னையும் மறந்து பிசாசின் கட்டுபாட்டிற்குள் வந்து விடுகிறான். பல லட்சம் பணம் செலவு செய்தாலும் இந்த பிசாசை சுய முயற்சியினால் விரட்ட முடியாது. அப்படியானால் என்ன செய்வது? " தேவனுக்கு கிழ்படிந்திருங்கள். பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களை விட்டு ஓடிப்போவான் " என்று ( யாக் 4: 7) வேதம் சொல்கிறது.
நாம் தேவனுக்கு கிழ்படிந்து அவருடைய இரத்தத்தினால் பரிசுத்தமக்கப்பட்டு விசுவசிகளாகி, இயேசுவின் பெயரை உச்சரித்து பிசாசை எதிர்க்கும்போது, பிசாசு நடுங்குவான். இயேசுவின் பெயரை உச்சரித்தால் நம்மை விட்டு வெகு தூரம் ஓடிப்போய்விடுவான்.
தினகரன் ஆன்மிக மலர்